தமிழ்நாட்டில் எதிர்வரும் பருவ மழையை முன்னிட்டு டெங்கு மற்றும் தொற்று நோய் பரவாமல் தடுக்க 11 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

தமிழ்நாட்டில் எதிர்வரும் பருவ மழையை முன்னிட்டு டெங்கு மற்றும் தொற்று நோய் பரவாமல் தடுக்க  11 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். 

இது குறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இருப்பதன் விவரம்:

* சுகாதாரமான குடிநீரை அன்றாடம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீரில் குறைந்தபட்ச குளோரின் அளவு 0.2 பிபிஎம் ஆக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* திறந்த நிலை கிணறுகள் போன்ற நீராதாரங்களில் குளோரின் சேர்க்க வேண்டும். குடிநீர் தேக்க தொட்டிகள் மற்றும் மேல்நிலை தொட்டிகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

* வீடுகள் மற்றும் பொது இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான டயர், கொட்டாங்கச்சி மற்றும் திறந்த நிலை தொட்டிகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* மழைநீர் வடிகால்களை தினமும் சுத்தப்படுத்தி வடிகாலில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கொசு ஒழிப்பு மருந்தை சரியான கால இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

* அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் பகுதிகளில் காலை 6 மணிக்கு அலுவலர்கள் நேரில் சென்று துப்புரவுப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

* தொற்று நோய்களைப் பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்களை முழுமையாக ஒழிக்க வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளின் உள்ளேயும், வெளியேயும் புகை அடித்தல் மற்றும் மருந்து தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* மாநகராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் உள்ள காலி மனைகளில் சில இடங்களில் பொது மக்களால் கொட்டப்பட்டு தேங்கிக் கிடக்கும் குப்பைக் கூளங்களை, அவ்விடம் தனியார் இடம் என்றும் பாராமல் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கொசுமுட்டை மற்றும் புழுக்களை ஒழித்திட தேவையான அளவு மருந்தினை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* புகை அடிக்கும் இயந்திரங்கள் போதுமான அளவில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்படின் உடனடியாக புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோரைத் தொற்று நோய் ஒழிப்புப் பணியில் முழுமையாக ஈடுபடுத்தி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* முக்கியமாக கைப் பிரதிகள் வழங்குதல், ஊர்வலம், தகவல் கல்வி மற்றும் தொடர்பு ஆகிய முறைகளை பயன்படுத்தி விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்து டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தொற்று நோய் பாதிப்புகள் அறியப்பட்டுள்ள இடங்களில் மேற்படி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற ஏதுவாக சிறப்பு குழுக்கள் அமைத்து சுகாதார துறை அலுவலர்களுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மேற்கொள்ள வேண்டும்.

No comments

Popular Posts

Powered by Blogger.