சமையல் எண்ணெய் பற்றிய குறிப்பு

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்புச் சத்தைக் குறைத்து இதய நோய் வராமல் தடுப்பதுடன், புற்று நோயையும் வராமல் தடுக்கிறது.

சமையல் எண்ணெய் தேர்வு செய்யும் போது கவனம் தேவை
இன்றைய சூழலில் எண்ணெய் என்றாலே பலரும் அலறியடித்து ஓடுகிறார்கள். உண்மையில் நம் உடலுக்கு ஓரளவு எண்ணெய் மிக மிக அவசியம். உணவில் குறிப்பிட்ட அளவு கொழுப்புச் சத்து கண்டிப்பாக இருக்க வேண்டும். இதுதான் உடலின் சீரான இயக்கத்துக்கு துணை செய்கிறது. எண்ணெய் மூலம் செய்யப்படும் உணவுப் பொருட்கள் காரணமாக உடலில் கொழுப்புச் சத்து சேருகிறது. ரத்தத்தில் கொழுப்புச் சத்து அளவு அதிகமாகும் நிலையில் மட்டுமே உடல்நலப் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.

எண்ணெய் என்பது திரவக் கொழுப்பு. தேங்காய் எண்ணெய், நெய் போன்றவை குளிர்காலத்தில் திடக் கொழுப்பாக மாறுகின்றன. நாம் சாப்பிடும் எண்ணெய் பலகாரங்கள் மூலம் கொழுப்புச் சத்து உடலை அடைகிறது. உணவிலிருந்து புரதச்சத்தைப் பிரிக்கும் வேலையை கல்லீரல் செய்கிறது. அப்போது கொழுப்புச் சத்து வகைகளுக்கு ஏற்ப, கொலஸ்ட்ராலை அது உற்பத்தி செய்கிறது. இதனால் ரத்தக் குழாய்களில் கொஞ்சம் கொஞ்சமாக அடைப்பு ஏற்படுகிறது.

உலக சுகாதார அமைப்பும், அமெரிக்க இதய மருத்துவர்கள் சங்கமும், சமையல் எண்ணெய் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ராலை (எல்டிஎல்) குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை (எச்டிஎல்) அதிகரிக்கச் செய்யவேண்டும் என்று கூறுகின்றன.

சமையல் எண்ணெய்யில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படுத்துகிறது. லேசான மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் கொழ கொழவென அசல் வாசனையுடன் இருக்கும் இயற்கையான எண்ணெய்யை பெரும்பாலும் மக்கள் விரும்புவதில்லை. எண்ணெய்யின் கொழுப்புத் தன்மையையும், நிறத்தையும் நீக்குவதுதான் சுத்திகரிப்பு என்பது. இதற்காக சோப்பு தயாரிக்க பயன்படும் காஸ்டிக் சோடா, அடர் கந்தக அமிலம், பிளச்சிங் பவுடர் ஆகியவற்றைக் கொண்டு எண்ணெய்யின் நிறம், கொழ கொழத்தன்மை போன்றவற்றை நீக்குகிறார்கள்.

எண்ணெய்யில் உள்ள கொழுப்பை பிரிக்க காஸ்டிக் சோடாவும், நிறத்தை நீக்கி பளபளவென மாற்ற பிளச்சிங் பவுடரும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேதிப் பொருட்களும் இறுதியில் நீக்கப்பட்ட பிறகே சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விற்பனைக்கு வருகிறது. ஆனால் அந்த வேதிப்பொருட்கள் முழுமையாக நீக்கப்படுவதில்லை.

ஒரு சதவீதமாவது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயிலேயே தங்கி விடுகிறது. இப்படி தங்கும் கந்தக அமிலம், எலும்புகளை வலுவிழக்கச் செய்து மூட்டு நோய் பிரச்சினைக்கு அஸ்திவாரம் போடுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தையும் குறைக்கிறது. எனவேதான் சுத்திகரிக்கப்படாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், ரைஸ் பிரான் (தவிட்டு) எண்ணெய் வகைகளை பயன்படுத்தும்படி உணவு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்புச் சத்தைக் குறைத்து இதய நோய் வராமல் தடுப்பதுடன், புற்று நோயையும் வராமல் தடுக்கிறது. ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது, நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துவது, தோலில் ஏற்படும் சுருக்கத்தை தடுத்து பளபளப்பாக வைப்பது போன்ற வேலைகளை செய்கிறது. அதனால் இயற்கையான சமையல் எண்ணெய்யை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதே நல்லது.

No comments

Popular Posts

Powered by Blogger.