திருவள்ளுவர், மதத்துக்கோ, இனத்துக்கோ சொந்தமாணவர் கிடையாது - திரு விசயகாந்த்.
உத்திரகாண்டில் உள்ள ஹரித்துவாரில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவரின் சிலையை நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பா.ஜ.க மூத்த தலைவர் தருண் விஜய் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். திருவள்ளுவர் சிலையை நிறுவ, முதலில் ஹரித்துவாரில் உள்ள ஹர்க்கிபவுரி என்ற இடத்திலும், பின்பு கங்கைக் கரையோரம் உள்ள சங்கராச்சாரியார் சதுக்கத்திலும், திருவள்ளுவர் சிலையை நிறுவுவதாக இருந்தது, இந்த இரண்டு இடத்திலும் எதிர்ப்பு கிளம்ப, பின்பு தாம்கோதி என்ற இடத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் உத்திரபிரதேச கவர்னர் திரு.ராம்நாயக், மேகாலயா கவர்னர் திரு.சண்முகநாதன் இவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக தலித் பிரச்சனை எழுப்பப்பட்டு, திருவள்ளுவரின் சிலைக்கு அவமதிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. தாம்கோதி என்ற இடத்தில் அமைக்க இருந்த 12 அடி உயர திருவள்ளுவர் சிலை, கருப்பு பிளாஸ்டிக்கால் பொதியப்பட்டு புல் தரையில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை ஊடகங்கள் வாயிலாக கண்ட அனைத்து தமிழ் சமுதாயமே பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிகழ்வு இந்தியாவை தலைகுனிய செய்துள்ளது.
திருவள்ளுவர், மதத்துக்கோ, இனத்துக்கோ சொந்தமாணவர் கிடையாது. உலகலாவிய கருத்துகளை தன் எழுத்து மூலம் இந்த உலகிற்கு அர்ப்பணித்துள்ளார். அந்த மகானின் சிலைக்கே சாதி சாயலை பூசி இந்த செயலை செய்தவர்கள் மனித பிறவிகள் தானா? என அனைவரும் கேள்வி கேட்கும் வண்ணம் பெரும் பிழையை இழைத்து விட்டனர். தமிழ் சமுதாயத்தின் அடையாளம் திருவள்ளுவர், அவரது சிலைக்கு ஏற்பட்ட அவமானம் தமிழ் இனத்துக்கே ஏற்பட்ட அவமானமாக கருதிகிறோம். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு திருவள்ளுவர் சிலையை உரிய மரியாதையோடு நிறுவவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
No comments