வாசிப்பு பழக்கம் இல்லையெனில் நம்மைவிட்டு தமிழ் தள்ளிப்போகும்: மரபின் மைந்தன் முத்தையா கணிப்பு
இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கம் இல்லையெனில், நம்மைவிட்டு தமிழ் தள்ளிப்போகும் என்று மரபின் மைந்தன் முத்தையா கூறினார்.
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பில் மாதந்தோறும் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான நிகழ்ச்சி, பாலக்காடு சாலையிலுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இலக்கிய வட்டச் செயலாளர் கவிஞர் ரா.பூபாலன் வரவேற்றார்.
எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா எழுதிய, ‘இணைவெளி’, கவிஞர் சூரியதாஸ் எழுதிய ‘எனது சட்டையில் இன்னொருவர் வாசனை’ ஆகிய கவிதை நூல் தொகுப்புகளை கவியன்பன் பாபு மற்றும் க.அம்சப்ரியா ஆகியோர் அறிமுகம் செய்துவைத்தனர்.
புன்னகை இதழின் 76-வது வெளியீட்டை, மரபின் மைந்தன் முத்தையா வெளியிட, எழுத்தாளர் இளஞ்சேரல் பெற்றுக்கொண்டார்.
எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா பேசும்போது, “பொள்ளாச்சி, பல கவிஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது. கவிதை வாசிக்கும்போது, அதன் உள்ளீடுகள் மற்றும் தொன்மையும் வாசிப்பவர்களுக்கு காட்சிப்படுத்தலாக அமைய வேண்டும். அதில் தான் கவிதையின் வெற்றி அடங்கியுள்ளது.
நம்மிடம் வாசிப்பு பழக்கம் இல்லையெனில், தமிழ் நம்மைவிட்டு தள்ளிப்போகும். நூல்களை வாசிக்க, வாசிக்கத்தான் கவிதை வசப்படும்” என்றார்.
நன்றி தின இதழ்.
No comments